மலாலாவை மட்டுமே தெரிந்த உங்களுக்கு
எங்கள் நாட்டின் ஆயிரமாயிரம் விபூஷிக்காகளை தெரியாமல் போனது ஏனென்று புரியவில்லை..
அடுத்த வேளை உணவுக்கு போராடிய போராட்டத்தை பார்த்திருப்பீர்கள்..
அறிவுக்காய் கல்வி வேண்டி போராடியதை பார்த்திருப்பீர்கள்..
அநியாயமாய் கொலை செய்வதை எதிர்த்து போராடியதை பார்த்திருப்பீர்கள்..
வாழும் வாழ்க்கைக்காய் போராடும் எம் பெண்களை பார்த்தீர்களா?
அண்ணன் தம்பியை அப்பாவை தொலைத்துவிட்டு,
புதைகுழிகளுக்குள் பிணம் தேடும் போராட்டத்தை பார்த்தீர்களா?
பெற்றவளை சீரழித்து, பிள்ளையை கொன்ற பின்னும்..
பேருக்காய் வாழும் வாழ்க்கையை தேடி நிதமும்போராடும் அகதிகளை அறிந்திருக்கிறீர்களா..
மண்ணிழந்து, மனையிழந்து, மனைவியிழந்து அங்கம் இழந்து அனாதைகளாய் வாழும்
ஒவ்வொரு நாளும் போராடும் அற்ப மாந்தர்களை நினைத்திருக்கிறீர்களா?
மாதவிடாய் நேரங்களில் பழந்துணிக்கும் வழியின்றி
தந்தையின் சாறனைக் கிழித்துக் கட்டும் எம் இனப் பெண்களையும்,
மகளுக்காய் பரதேசியாகும் தந்தைகளையும் உங்களுக்குத் தெரியுமா
தன் கண்முன்னே தனயனை இழுத்துச் செல்வதைப் பார்த்து
பித்தமாகிப் பிதற்கும் அம்மாக்களின் அவலம் கேட்கிறதா உங்களுக்கு
மலவாயிலில் போத்தல்களும், கண்களில் மிளகாயின் காரமும், மின்சாரத் தாக்கமும், பிளாஸ்டிக் குழாயடிகளும் வாங்கி சாவிலும் சாந்தி காணாத என் சகோதரர்களை உங்களுக்குத் தெரியுமா
அக்காவை தங்கையை தனித்து இழுத்துச் செல்கையில், மிருகங்களின் கூர்நகங்களுக்குள் சிக்கியும்,
வெறிகொண்டெழுந்து வீரச்சாவடைந்த வீரர்களையும், ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலையில் தன்னையே மாய்த்துக்கொண்ட உடன்பிறந்தவர்களையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்..
நாளும் பொழுதும், உதிரப்பெருக்கையும், உயிரின் ஓலங்களையும், குண்டுச் சத்தங்களையும், கொலைவெறியாளர்களையும் கண்டு கண்டு , கருணை – வீசை என்ன விலையெனக் கேட்கும் ஒரு தலைமுறையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
நித்திரையிலும் நிம்மதியின்றி..பேயின் ஓலங்களுடன், பயங்கர நினைவுகள் படமாய் ஓட.. வியர்த்தெழுந்து வெறித்துப் பார்க்கும் இளையவர்களை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்..
பக்கத்தில் படுத்திருந்த கணவனை வீடுடைத்து சுட்டுக்கொன்று,
அவனுக்காய் அழக்கூட அவகாசம் கொடுக்காமல் தலைமுடியால் பிடித்திழுத்து சவத்துக்கு முன்னே
மனைவியை சீரழிக்கும் மனித மிருகங்களை பார்த்திருக்கிறீர்களா
ஒரே வரிசையில் கைவிலங்கிட்டு, மண்டியிட வைத்து, துப்பாக்கிச் சன்னங்கள் உயிரை எடுத்தனவா என்று அறியாமலேயே, குழிக்குள் ஒன்றாய் மூடி மண்ணெண்ணையிட்டு மனிதர்களை எரித்துக் கொன்ற சக மனிதர்களை பார்த்திருக்க மாட்டீர்கள்..
முள்வேலிக்குப் பின்னால், முக்தி பெற வழியுமின்றி
இலக்கற்ற நோக்குடன் வெற்றிடத்தை வெறித்துப்பார்த்து
விரக்தியோடு வாழும் வெறும் மனிதர்களை உங்களுக்குத் தெரியாது
பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டுக் கட்டடம்
இடிந்து சிதிலமடைந்து, எறும்புகளும் கரையான்களும் வாழும்
நரகமாய் மாறியது கண்டு
இடிந்து போய் இயந்திரமாய் திரியும் குடும்பஸ்தர்களின் கண்ணீர் நீங்கள் அறியாததே
வாழ்வு தந்த வயல்களுக்குள், குண்டுகளும், சவங்களும் கொட்டிக்கிடக்க
வாழ வழியின்றி அரிசிக்கும் பருப்புக்கும் கையேந்தி
யாசகர்களாய் மாறிநிற்கும் யோகம் பெற்ற
உழைப்பாளிகளின் கண்ணீர் உதிரமாய் பெருகுவது உங்களுக்குத் தெரியாது..
பார்க்க வேண்டாம் இக்கொடுமைகளை.
அடுத்த முறை ஏதோ ஒரு அரசியல்வாதிக்கும், நடிகனுக்கும், விளையாட்டு வீரனுக்கும் பணக்காரனுக்கும் அநீதி நடந்துவிட்டதென்று பொங்கியெழும் போது
கொஞ்சம் பொத்தாம் பொதுவாகவாவது நினைத்துப்பாருங்கள்
நிலைதடுமாறினாலும், நிமிர்ந்து வாழும் என் இனம் பற்றியும்!!